"பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. அதை சற்றே குறைவின்றி பிரதிபலிக்கும் விதமாக, பணம் இன்றைய மனிதனை அடிமைப் படுத்திருக்கின்றது. இன்று பணம் ஒருமனிதனிடத்தில் இல்லை என்றால் அவன் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமேயில்லை என்றளவிற்கு, பணம் உயிருக்கு நிகராக நோக்கப்படும் அவலம் மனிதனை பீடித்திருக்கிறது. ஏனென்றால் பணம் இன்று மனிதனுடைய அனைத்து அம்சங்களிலும் ஊடுறுவி செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.
எனவேதான் மனிதன் பணத்துக்காக நாயாய், பேயாய் அலைகின்றான். அதை அடைந்து கொள்வதற்கு இரவு பகல், மழை வெயில் என்று பாராமல் தனது வாழ்க்கையே அரப்பணிக்கின்றான். மானம், மரியாதை, குடும்பம், குழந்தை, சொந்தம், பந்தம், வீடு, நாடு என்று அனைத்தையும் பணத்துக்காக வேண்டி துச்சமாக துறக்கின்றான். பொய், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கலப்படம் என்று பஞ்ஞமா பாதகங்களையும் பணத்திற்காக பயமின்றி செய்யத் துணிகின்றான். இத்தனைக்கும் தனக்கு பணம் கிடைத்தால் போதுமென்ற தப்பெண்ணம்தான் அடிப்படைக் காரணம். மட்டுமல்லாமல் கர்வம், பெருமை, மற்றவர்களை மட்டம் தட்டல், தற்பெருமை பாரட்டல், கஞ்ஞத்தனம் போன்ற கூடாத துர் குணங்களாளும் பணம் மனிதனை ஆட்டிப்படைத்து விழுங்கிவிட்டிருக்கின்றது. பணம் அளவு கடந்து இருப்பவர்கள், பணம் அளவோடு இருப்பவர்கள், பணத்திற்காக திண்டாடுபவர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களும் பெரும்பாலும் பணத்தின் காரணமாகத்தான் தனது மானிடப் பண்புகளையெல்லாம் மறந்து மிருகங்களை விட கேவலமானவர்களாக மாறிவிடுகின்றனர்.