துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)
ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 06
ஜனாசாவுடைய சட்டங்கள்
************************************
• நோயாளர்களை நோய் விசாரிக்கச் செல்வது சுன்னா
• மரணத் தருவாயில் இருப்பவருக்கு ஷஹாதா கலிமா சொல்லிக் கொடுப்பது சுன்னா
• ஜனாசாவை கிப்லாவின் பக்கம் திருப்புவது சுன்னா (ஹதீஸில் இதற்கு சஹீஹான எந்தவித ஆதாரமும் இல்லை)
• மரணித்தவரின் இரண்டு கண்களையும் மூடி விடுவது சுன்னா
• மரணித்துக் கொண்டிருப்பவருக்கு யாஸின் ஓதுவது சுன்னா (இது சம்பந்தமான ஹதீத்கள் ஆதரமற்றவைகளாகும்)
• ஜனாசாவை அடக்குவதற்கு இயன்றளவு அவசரப்படுத்தல் வேண்டும் மூன்று காரணங்களைத் தவிர.
1. இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்காக
2. கடன் விடயங்களுக்காக
3. ஜனாசாவை அடக்குவதற்குண்டான முக்கிய பணிகளுக்காக
• ஜனாசாவை முத்தமிடுதல் கூடும்
• மரணத்திற்கு அண்மித்தவர் இறைவன் பற்றிய நல்லெண்ணத்துடன் இருக்க வேண்டும். இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடல் வேண்டும். எல்லாவிதமான கடமைகள், உரிமைகள், பொறுப்புக்களை உரிய முறையில் ஒப்படைத்து விடல் வேண்டும்.
• உயிரோடு உள்ளவர்கள் இறந்த முஸ்லிமை குளிப்பாட்டுவது கடமை.
• நெருக்கமானர் அவருடைய உறவினரை குளிப்பாட்டுவதற்கு மிகவும் தகுதியானவர். ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் குளிப்பாட்ட வேண்டும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் குளிப்பாட்டுவது சிறந்ததாகும்.
• கழுவுதல் என்பது மூன்று முரை அல்லது ஐந்து முறை இருத்தல் வேண்டும். அல்லது அதைவிட அதிகமாக ஒற்றைப்படையில் இருத்தல் வேண்டும்.
• தண்ணீராலும் இலந்தை இலையைக் கொண்டும் கழுவ முடியும். கடைசியாக கற்பூரத்தை கலந்து கழுவுதல் வேண்டும். (இலந்தை இலை கற்பூரம் இல்லாவிட்டால் வேறு வாசனைப் பொருட்களை பயன்படுத்த முடியும்)
• வலது பக்கத்திலிருந்தும் வுழூவுடைய உறுப்புக்களை முற்படுத்தியும் கழுவுதல் சிறந்ததாகும்.
• யுத்த களத்தில் கொல்லப்பட்ட ஷஹீத், குளிப்பாடப் பட மாட்டார்.
• கபன் செய்வது வாஜிப். முடிந்தளவு மறைக்கக் கூடிய அமைப்பில் கபனிடல் வேண்டும். அளவுக்கதிகமாக, ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்.
• வெள்ளை நிறம் சிறந்தது. கட்டாயம் அல்ல.
• முழு உடலையும் மூன்று முறை சுற்றி கபனிடுவது சுன்னா.
• யுத்த களத்தில் கொல்லப்பட்ட ஷஹீத் எந்த ஆடையில் இருந்தாறோ அந்த ஆடையிலே கபனிட்டு அடக்கம் செய்தல் வேண்டும்.
• ஜனாசாவுடைய உடலிலும் கபன் ஆடையிலும் வாசம் பூசுவது சுன்னாவாகும்.
ஜனாசா தொழுகை
**************************
• இந்த தொழுகை பர்ளு கிபாயாவாகும்.
• ஆண் ஜனாசாவாக இருந்தால் ஜனாசாவின் தலைமாட்டில் இருந்து தொழுவிக்க வேண்டும். பெண் ஜனாசாவாக இருந்தால் ஜனாசாவின் இடுப்புப் பகுதியில் இருந்து தொழுவித்தல் வேண்டும்.
• தொழுகையில் நான்கு முறையோ ஐந்து முறையோ தக்பீர் சொல்லல் வேண்டும்.
• ஆரம்ப முதலாவது தக்பீருக்குப் பின்னால் சூரத்துல் பாத்திஹா ஓதுதல் வேண்டும். விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவிற்குப் பிறகு துணை சூரா ஏதாவது ஒன்றை ஓத முடியும்.
• இரண்டாவது தக்பீருக்குப் பின்னால் ஸலவாத்துல் இப்ராஹீமா ஓதுதல் வேண்டும்.
• மூன்றாவது தக்பீருக்கு பின்னால் ஜனாசாவிற்காக தூஆ பிரார்த்தனை செய்ய வேண்டும்.
• நான்காவது தக்பீர் சொல்லி ஸலாம் கொடுத்தல் வேண்டும்.
• ஒவ்வொரு தக்பீருக்குப் பின்னாலும் வந்த துஆக்களை கேட்டுக் கொள்ளலாம்.
• யுத்த களத்தில் கனீமத் பொருட்களை பிரிப்பதற்கு முதல் அதில் ஏதாவதொன்றை எடுத்து மரணித்தால் அவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை.
• தற்கொலை செய்தவருக்கு தொழுவித்தல் கூடாது
• காஃபிருக்கு தொழுவித்தல் கூடாது.
• யுத்த களத்தில் கொல்லப்பட்ட ஷஹீத்களுக்கு தொழுவித்தல் கூடாது.
• கப்ரில் ஜனாசாவிற்காக தொழலாம்
• ஜனாசாவிற்கு தொழுகை நடாத்தப் படா விட்டால் அவருக்காக காயிப் ஜனாசா தொழுகை நடத்தலாம்.
• மிக வேகமாக ஜனாசாவை கொண்டு செல்லல், ஜனாசாவோடு நடந்து செல்லல், ஜனாசாவை சுமத்தல் ஆகியவை சுன்னாவாகும்.
• ஜனாசாவை முந்திச் சென்றாலும் அல்லது பிந்தொடர்ந்து சென்றாலும் அதற்கான கூலியில் வித்தியாசமில்லை.
• வண்டியில் போவது வெறுக்கத்தக்கது. வரும் பொழுது வண்டியில் வருவது விரும்பத்தக்கதாகும்.
• ஜனாசாவை பரை அடித்தல், சத்தம் போட்டு அழுதல், ஜனாசாவிற்குப் பின்னால் நெருப்புப் பந்தல் கொண்டு செல்லல், ஆத்திரத்தில் ஆடையை கிழித்துக் கொள்லல், அழிவை வேண்டுதல், போன்றவைகள் கூடாது. ஜனாசாவை கொண்டு செல்லும் போது உட்காரக் கூடாது ஜனாசாவை வைக்கும் வரைக்கும்.
ஜனாசாவை அடக்குதல்
******************************
• அடக்கும் போது மிருகங்கள், பிராணிகள் சேதம் விளைவிக்காத வகையில் பாதுகாப்பாக அடக்குதல் வேண்டும்.
• நேரடியாக குழி தோன்றி அடக்குவதும் தவறில்லை. குறுக்காக வைத்து அடக்குவது சிறந்தது.
• மையித்தின் கால்மாட்டாக கப்றில் வைக்க வேண்டும்
• வலது புறம் கிப்லாவை முன்னோக்கி வைத்தல் வேண்டும்.
• ஜனாசாவில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் போடுதல் சிறந்தது. (இதற்கான ஆதரபூர்வமான ஹதீத்கள் இல்லை)
• கப்றுகளை ஒரு சாணுக்கு மேல் உயர்த்துதல் கூடாது. (தற்காலிக அடையாளப்படுத்துவதற்காக சிறு அடையாளங்களை வைப்பது குற்றமாகாது)
• இறந்தவர்களை ஸியாரத் செய்வது மார்க்கமாகும். ஸியாரத் செய்பவர் கிப்லாவை முன்னோக்கி இருத்தல் வேண்டும்.(கிப்லாவை முன்னோக்கி இருத்தல் என்பதற்கு ஆத்ரபூர்வமான ஹதீத்கள் இல்லை)
• கப்ருகளை பள்ளிகளாக எடுத்துக் கொள்ளல்; கப்ருகளை அலங்கரித்தல்; அதில் விளகேற்றல், அதன் மேல் உட்காருதல், இறந்தவர்களை ஏசுதல் போன்றவைகள் கூடாது.
• ஜனாசாவுடைய சொந்தங்களுக்கு ஆறுதல் சொல்லுதல் சுன்னாவாகும்.
• ஜனாசாவுடைய வீட்டுக்கு சாப்பாடு கொடுத்தல் சுன்னா.